வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில்
சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையிலுள்ள கோரக்கோயில்
பிரதேசத்தில் பெண்ணொருவர் குளித்துக்கொண்டு இருந்திருக்கிறார்.
இரவுவேளையில் அவ்விடத்திற்கு மர்மமான முறையில் வந்த இருவர் அப்பெண்மீது
சேஷ்டையில் ஈடுபட்டுள்ளனர். உடனே அப்பெண் கூச்சலிட்டு ஊரைக் கூட்டியதும்
அவ்விருவரும் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்துள்ளனர். இதனை
அவதானித்த பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு சந்தேக நபர்களை
தங்களிடம் ஒப்படைக்குமாறு சத்தமிட்டுள்ளனர். இவர்களை பொலிஸார் அகற்ற
முற்பட்டவேளையில் பொலிஸார் மீது கல்லெறிகள் விழுந்துள்ளன. ஆத்திரமடைந்த
பொலிஸார், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கலகத்தில் ஈடுபட்டவர்களை அடக்க
முற்பட்டிருக்கிறார்கள்.
பெண்ணின் கையில் ஏற்பட்ட கீறல்
இது தொடர்பாக களமுனையிலிருந்து
எமது செய்தியாளர் தெரிவிக்கையில்; இங்கு ஒரு பெண்ணின் கையை
இனந்தெரியாதவர்கள் (மர்ம மனிதர்கள்) கிளித்துவிட்டுச் சென்றனர். உடனே
மக்கள் அவரை விரட்டிப்பிடிக்கச் சென்றனர். தீடீரென் அவன் பொலிஸ்
நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளான். பொதுமக்கள் மர்ம மனிதனைத் தேடி வலை
விரிந்திருக்கின்றனர். கையை வெட்டியவனும் மர்ம மனிதனாகத்தான்
இருக்கவேண்டும் என்று சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் மக்கள் ஒன்றுகூடி
அவனைக் காட்டுமாறு கூச்சலிட்டுள்ளனர். மர்ம மனிதனின்மேல் ஆத்திரத்தில்
இருக்கும் மக்கள் அவனைக் கொன்றுவிடுவார்கள் என பொலிஸார் பொதுமக்களைத்
தடுக்கவே, பொலிஸாரை நோக்கி கல்லெறிகள் வீழ்ந்தன. மக்கள் அவனை தங்களிடம்
ஒப்படைக்குமாறு கோஷமிட்டனர். இதனைக் கட்டுப்படுத்த பொலிஸார்
கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்தனர். தற்போது அங்கு பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டுள்ளது.
பெண் குளித்துக்கொண்டிருந்த இடம்
தற்சமயம் நிலைமை சுமூக
நிலைக்குத் திரும்பியுள்ளது. விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு
நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். சேத விபரம் பற்றி இதுவரை எதுவித தகவலும்
வரவில்லை. இதுபற்றி பொலிஸாருடன் தொடர்புகொண்டு கேட்டபோது எதுவும் சொல்ல
மறுத்துவிட்டனர். தற்போது மர்ம மனிதன் என்ற பெயரில் சந்தேக நபர்கள்
மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவம் பொலிஸார்
அவர்களைக் காப்பாற்றுவதாலும் பொதுமக்களுக்கு அரசு மீதான சந்தேகம்
வலுப்பெறுவதாக பலமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். உண்மையில் நடப்பது என்ன?
யார் இந்த கிறீஸ் (மர்ம) மனிதன்? ஏன் பெண்களைக் குறிவைத்து தாக்குதல்
நடத்தவேண்டும்? அல்லது தற்போது மர்ம மனிதன் பெயரைப் பயன்படுத்தி
வெளியாட்கள் தங்களது கைவரிசையைக் காட்டுகின்றார்களா? இதற்கான உள்நோக்கம்
என்ன? அரசு ஏன் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை? இவ்வாறான பல
கேள்விக் கணைகளுக்கு விடைதெரியாமல் இந்த மனிதனைப் போலவே மர்மமாக உள்ளது.