ஏற்கெனவே நிதி அமைச்சு, பொருளாதார
அபிவிருத்தி அமைச்சு நகர அபிவிருத்தி என்பவற்றின் ஊடாக பெரும்பாலான
நிதியைக் கையாளும் அரசாங்கம் இத்திட்டத்தினூடாக மீதி நிதியையும் கையாளும்
அதிகாரத்தைக் குடும்பத்துக்கு வழங்கியுள்ளனர் என ஆசிரியர் எம்.எச்.எம்.
ஹஸன் தெரிவித்தார்.
திவிநெகும
சட்டமூலம் குறித்து நீதிக்கும் சமாதானத்திற்குமான முன்னணியின் ஏற்பாட்டில்
ஒழுங்கு செய்யப்பட்ட கலந்துரையாடலிலேயே ப்ரபோதய சஞ்சிகையின் ஆசிரியர்l எம்.எச்.எம். ஹஸன் அவர்கள் தெரிவித்தார்.
நாடு
நகர சட்டமூலத்தைப் பொறுத்தவரை முன்னாள் கிழக்கு மாகாணசபை முதலமைச்சரின்
தலைமையிலும் முன்னாள் வடமத்திய மாகாண சபை முதலமைச்சரின் தலைமையிலும்
ஏற்கனவே இரு மாகாணங்களிலும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. தோற்கடிக்கப்பட்ட இரு
கிழமைகளில் தேர்தலுக்குரிய காலம் முடிவடைய முன்னரே மாகாணங்கள்
கலைக்கப்பட்டு மீளத் தேர்தல் நடத்தப்பட்டது.
மத்திய
அரசின் கருத்தையும் மீறி இச்சட்டமூலம் தோற்கடிக்கப்பட்டமையினாலேயே
முன்னாள் முதலமைச்சர்கள் மீண்டும் முதலமைச்சராகுவதற்கான வாய்ப்பை
இழந்துவிட்டதாக பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஏனெனில் வடமத்திய மாகாணத்தில் தோற்கடிக்கப்பட்டவுடன் முதலமைச்சரை தனது அலுவலகத்திற்கு வரவழைத்த ஜனாதிபதி அதிருப்தி தெரிவித்ததுடன், 15
மாதங்களுக்கு முன்னரே மாகாண சபையைக் கலைத்து மௌனமாகத் தேர்தலை நடத்தி
முதலமைச்சர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளதை நோக்கும் போது மாகாண சபைகளின்
அதிகாரங்களைக் குறைப்பதற்கு அரசாங்கம் எவ்வளவு முக்கியத்துவம்
வழங்குகின்றது என்பதைக் காண முடியும்.
மறுபுறம் இந்நாட்டில் 55 அமைச்சுகள் உட்பட தினைக்களங்கள், தலைமைத்துவம் இருந்தாலும் கூட அவற்றில் ஒரு ராஜபக்ஷ இல்லாவிட்டால் அவை சீராக நடைபெறாது என்ற சிந்தனை வளர்க்கப்பட்டு வருகிறது.
திவிநெகும
திட்டம்கூட கிராமிய மட்டத்திலான அபிவிருத்திக்கு ஒதுக்கப்படும்
கோடிக்கணக்கான சமூர்த்தி நிதிகள் யாவற்றையும் கையாளும் விடயம் மட்டுமல்ல
சகல கிராமிய அபிவிருத்திகளையும் முன்னெடுக்கும் விடயம் என்ற வகையில்
ராஜபக்ஷவிடமே கையளிக்கப்பட்டுள்ளது.
ஒரு
நாட்டில் திணைக்களம் ஏற்படுத்தப்படுவது புதிய விடயமல்ல. ஆனால்
ஏற்படுத்தப்பட்ட தினைக்களத்தை யாரிடம் ஒப்படைப்பது என்பதனை பின்னரே
தீர்மானிப்பார்கள். திவிநெகும எனும் இத்திட்டத்தில் சகலதும் முன்னரே
இன்னாருக்கு என்று தீர்மானிக்கப்பட்டிருப்பது நோக்கப்பட வேண்டிய
விடயமாகும்.
இச்சட்டம் வெறுமனே முஸ்லிம்களுக்கோ, சிறுபான்மைக்கு
எதிரானது மட்டுமல்ல இந்நாட்டின் அனைவருக்கும் எதிரானது என்ற வகையில்
யாவரும் எதிர்த்து நிற்க வேண்டிய இத்தருணத்தில் சமூகம் அமைதியாக இருப்பதனை
பார்க்கும் போது இது குறித்த விளக்கம் பொதுமக்களை சென்றடையவில்லை என்பது
தெளிவாகின்றது.
எந்த
அமைச்சுக்கும் வழங்கப்படாத பாராளுமன்றத்தையும் மீறிய அதிகாரம்
அமைச்சினருக்கு வழங்கப்படுவது இச்சட்ட மூலத்திலுள்ள இன்னுமொரு விடயமாகும்.
அரசாங்க வருமானங்கள் யாவும் ஒன்றிணைந்த நிதிக்கு வர வேண்டும் இங்கு நிதி அமைச்சும், சமூர்த்தி அமைச்சும் தீர்மானிக்கும் இடத்திலேயே இதற்கான பணம் வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து அரசாங்க அதிபரோ, பிரதேச
சபை செயலாளரோ பிரதேச சபைத் தவிசாளரோ கேள்வி கேட்க முடியாது அவர்கள்
யாவரும் இச்சட்ட மூலத்தினூடாக அதிகாரமற்ற கீழ் மட்ட உத்தியோகத்தர் போலவே
நோக்கப்படுகின்றனர்.
அடுத்து இவர்களால் லொத்தர் சீட்டெழுப்பு நடத்த முடியும் அதனூடாக வரும் வருமானங்களும் அமைச்சினாலேயே நிர்வகிக்கப்படும்.
பொதுவாக
சிறிய நிதி நிறுவனங்கள் கூட மத்திய வங்கிக்குக் கீழ் வர வேண்டும் என்பதே
நாட்டுச் சட்டம். இங்கு மத்திய வங்கிக்குக் கீழ் வராத வகையில் இதன் கீழுள்ள
வங்கி அமைகிறது.
சிறுபான்மைக்கான அபிவிருத்தித் திட்டங்களைப் பொறுத்தவரை அபிவிருத்திப் பிரதேசங்கனைளத் தெரிவு செய்தல், இணைத்தல், எல்லை நிர்ணயித்தல், என்பனவற்றைத் தெரிவு செய்யும் அதிகாரம் அமைச்சருக்கு வழங்கப்படும் அதேவேளை இன விகிதாசார அடிப்படையில் யாரை இணைத்துக்கொள்வது? எப்பிரதேசத்தை தெரிவு செய்வது? என்பன
குறித்து தீரமானிப்பதும் இவர்கள்தான் என்பதனால் சிறுபான்மைப் பிரதேசங்கள்
புறக்கணிக்கப்படுவதற்கும் தனது அரசியல் இலாபம் கருதி அபிவிருத்திகளை
மேற்கொள்வதற்கான வாய்ப்பு காணப்படுவதோடு யாராலும் இது குறித்து கேள்வி
எழுப்பவும் முடியாது.
மொத்தத்தில் நிதியை சேகரிப்பது, செலவழிப்பது, பராமரிப்பது, அதற்கு ஆலோசனை வழங்குவது, அனைத்தையும்
தீர்மானிக்கும் அதிகாரம் மட்டுமன்றி அதனை மேற்பார்வை செய்யும் அதிகாரம்
ஒருவரிடம் தங்கியிருப்பது ஜனநாயக நாட்டில் அல்லது நல்லாட்சி என்ற
கருத்திட்டத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும் அம்சமாகும்.
மாகாண சபையின் அதிகாரங்களை திவிநெகும சட்ட மூலம் மீறுவது குறித்து உச்ச நீதி மன்றத்தினால் 34
பக்கங்களைக் கொண்ட ஆவணம் பாராளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளமை முக்கிய
அம்சமாகும். இன்னொருபுறம் உச்ச நீதிமன்றம் எதிர்ப்பை எழுப்பி மாகாண
சபைகளின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தமை, இரகசியமாக செய்து முடிக்க நினைத்த அரசாங்கத்திற்கு பலத்த அடியாகும்.