சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹகீம் தற்போது வகிக்கும் நீதி அமைச்சுக்குப் பதிலாக வேறு ஒரு பொறுப்பு வாய்ந்த அமைச்சுப் பதவியும், கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு விரைவில் பிரதி அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அரசாங்கம், கிழக்கு மாகாணசபையின் ஆட்சியைக் கைப்பற்ற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெறுவதற்காக வழங்கிய உறுதி மொழிகளுள் இந்த விடயமும் அடங்கி இருந்ததாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தவிசாளர் பஷீர் சேகு தாவூதுக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் பதவியும் மேலும் மூன்று எம்.பி.க்களுக்கு பிரதி அமைச்சர் பதவிகளும் வழங்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்தியதாக அந்த செய்தி தெரிவிக்கின்றது.
அந்த உடன்பாட்டின் பேரிலேயே கிழக்கு முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் விட்டுக்கொடுத்தது என்றும் அந்த முக்கியஸ்தர் சுட்டிக் காட்டியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விடயத்தை நேற்று ஜனாதிபதியை சந்தித்த அமைச்சர் ஹகீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் குழுவினர் வலியுறுத்தியதாகவும் அதற்கு ஜனாதிபதி பச்சைக் கொடி காட்டி இருப்பதாகவும் அறிய முடிகிறது.
meelparvai